Saturday, June 19, 2010

விவசாயியும் நாரையும் (நீதிக்கதை)

விவசாயி ஒருவர் வயலில் விதை விதைக்கும்போதெல்லாம் கொக்குகள் வந்து விதைகளைக் கொத்திச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது. என்வே, அவர் வயலில் வலை விரித்தார். அதில் ஏராளமான கொக்குகள் சிக்கிக் கொண்டன. அவற்றில் ஒரு நாரையும் அடங்கும். வலையில் இருந்து தப்பிக்கக் கடுமையாக முயற்சித்த நாரைக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த விவசாயி, வலையில் சிக்கிய கொக்குகளைப் பிடித்தார்.

“ஐயா எஜமானரே . . . தயவு செய்து இரக்கம் காட்டுங்கள்.என்னை விட்டுவிடுங்கள் ‘ என்று அவரிடம் கெஞ்சியது நாரை.

விவசாயி அதை காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்க, தொடர்ந்து கெஞ்சியது நாரை.

“ஐயா. . . என்னை இந்த முறை மட்டும் விட்டு விடுங்கள். என்னுடைய உடைந்த காலைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் ஏற்படவில்லையா? நான் கொக்கு இல்லை, நாரை! எனது சிறகுகளைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும் .நான் நல்ல குணம் கொண்டவன். நான் எனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன், அவர்களுக்கு அக்கறையாகப் பணிவிடை செய்து வருகிறேன். நான் இல்லாமல் தவித்துப்போய் விடுவார்கள்!” என்று கண்ணீர் வடித்தது.

அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த விவசாயி, “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் எனது நிலத்தில் திருட வந்த திருடர்களான இந்தக் கொக்குகளுடன் நீயும் சேர்ந்து வந்தாயல்லவா? நீ சகத்தான் வேண்டும்!” என்று கொக்குடன் நாரையும் எடுத்துச் சென்றார்.

நீதி: தீய கூட்டணி, தீமையையே ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment