Monday, October 12, 2009

கரும்பு

உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாரின் ருசியில் மயங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதிகளில் ஒருவர், ’தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’ என்று கரும்பை வர்ணித்துள்ளார். சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.


இனிப்பான கரும்பிற்குப் பின்னால் ஒரு கண்ணீர்க் கதையும் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அடிமைகள் வியாபார உலகில் வளருவதற்கு கரும்பு ஒரு காரணகர்த்தாவாக மாறிவிட்டது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஏராளமான கரும்புத்தோட்டங்கள் இருந்தன. அவற்றில் குறைந்த கூலியில் வேலை செய்ய அதிகமான ஆட்கள் தேவைப் பட்டனர்.

ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அடிமைகளைப் பண்டமாற்று முறையில் விலைக்கு வாங்கின. அந்த அடிமைகள் கரும்பு தோட்ட முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்க்கப்பட்டனர். தோட்டமுதலாளிகள் அடிமைகளை ஆடு, மாடுகளைப் போல கேவலமாக நடத்தினர். கி.பி.18 - ம் நூற்றாண்டில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய ஒரு வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் அடிமைகள் இங்கிலாந்து கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment